அன்னை தமிழகம் மனித குலத்திற்கு மகத்தான உதவிகளை வழங்கும் கருணையின் தொட்டிலாக உள்ளது
By: Nagaraj Sun, 05 Mar 2023 2:00:59 PM
சென்னை: எந்த பாதிப்பும் ஏற்படாது... தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவியதையடுத்து, பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார். நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கு இங்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மக்களை வாழ வைக்கும் தமிழகம் இது, வடமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்து தமிழகத்தில் வசிப்பவர்கள் இதை எங்களை விட அழுத்தமாக கூறுவார்கள். தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத மேடையில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் பேசியது, சமீபத்தில் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரவியது.
தமிழகத்தில் வசிக்க வந்த எனக்கு ரேஷன் கார்டு கிடைத்தது, அதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சிகிச்சை இலவசமாக கிடைத்தது. இப்போது என் குழந்தை பேசுகிறது. இதற்கு தமிழகம் தான் காரணம்,” என்றார். அன்னை தமிழகம் எப்போதும் மனித குலத்திற்கு மகத்தான உதவிகளை வழங்கும் கருணையின் தொட்டிலாக உள்ளது.
அது அப்படியே தொடரும். வணிகம், தொழில், மருத்துவம், கல்வி, வேலை என பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்து செல்கின்றனர். அவர்களும் உயர்கிறார்கள், தமிழகமும் உயர்கிறது.
சமீபகாலமாக அனைத்து மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு தேடி தமிழகம் வருகின்றனர். இதற்குக் காரணம், தமிழகம் சேவைத் துறைகள், கட்டுமானம், சிறு மற்றும் பெரிய நிறுவனங்கள் என பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பை வழங்குகிறது.
தமிழகம் சென்றால் வேலை கிடைக்கும். பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் இங்கு வருவதற்கு அமைதியான வாழ்க்கையே காரணம். நம்பிக்கையுடன் வரும் அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கும் அடிப்படை வசதிகளை வழங்குவதுடன், தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு உரிய சலுகைகள் மற்றும் பாதுகாப்பையும் தமிழக அரசு உறுதி செய்து வருகிறது. கொரோனாவின் 2வது அலையின் போது சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப விரும்பும் வடமாநில தொழிலாளர்களுக்கு உதவ மாவட்ட வாரியாக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.