- வீடு›
- செய்திகள்›
- மசாலா வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் எம்டிஎச் மசாலா நிறுவன உரிமையாளர் மகாஷே தரம்பால் மரணம்
மசாலா வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் எம்டிஎச் மசாலா நிறுவன உரிமையாளர் மகாஷே தரம்பால் மரணம்
By: Karunakaran Thu, 03 Dec 2020 12:14:15 PM
இந்தியாவில் மட்டுமல்லாமல் ஏராளமான வெளிநாடுகளிலும் எம்டிஎச் நிறுவனத்தின் மசாலாவுக்கு அதிக வரவேற்பு உள்ளது. மசாலா வணிகத்தில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனம் எம்டிஎச். இந்த நிறுவனத்தின் சிஇஓ மகாஷே தரம்பால் குலாதி. பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காத இவர், தனது கடின உழைப்பால் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்.
படிப்புக்கும், பதவிக்கும் சம்பந்தமே இல்லை என்பதை நிரூபித்த இவர், தள்ளாத வயதிலும் சுறுசுறுப்புடன் பணியாற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இந்நிலையில், முதுமை சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் மகாஷே தரம்பால்.
அவருக்கு வயது 98. கடந்த சில வாரங்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது.
அவரது மறைவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் பல்வேறு வர்த்தக சங்க தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் ஆளுமை கொண்ட தரம்பால், தனது வாழ்க்கையை சமுதாயத்திற்காக அர்ப்பணித்ததாக கெஜ்ரிவால் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.