எம்.வி. கங்கா விலாஸ் சொகுசு கப்பல் பயணத்தை தொடக்கி வைக்கும் பிரதமர்
By: Nagaraj Fri, 13 Jan 2023 10:11:12 AM
உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் இருந்து ‘எம் வி கங்கா விலாஸ்’ சொகுசு கப்பல் பயணத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
மொத்தம் 51 நாட்கள் அடங்கிய இந்த பயணத்தில் 50 சுற்றுலா தளங்களுக்கு சென்று வர திட்டமிடப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக தொலைவை உள்ளடக்கிய பயணமாக இந்த பயணம் அமைய உள்ளது.
இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள 5 மாநிலங்களில் உள்ள 27 நதிகளில் வழியாக 3,200 கிலோ மீட்டர் தொலைவுக்கு விலாஸ் சொகுசு நதி கப்பல் பயணிக்க இருக்கிறது. சுந்தரவன டெல்டா, காசிரங்கா தேசிய பூங்கா உள்ளிட்ட பல இடங்கள் வழியாக இந்த பயணம் செல்லும்.
இந்த சொகுசு நதி கப்பல் முதலில் வாராணசியில் இருந்து புறப்பட்டு பாட்னா நகருக்கு செல்லும். பின்பு அங்கிருந்து கொல்கத்தாவுக்கு சென்று அங்கிருந்து வங்கதேசத்துக்கு செல்லும். பின்பு வங்கதேசத்திலிருந்து புறப்பட்டு இந்தியாவுக்கு திரும்பும். இந்த பயணம் அசாம் மாநிலத்தில் திப்ரூகார் நகரில் முடிவடையும்.
இந்த சொகுசு கப்பல் குறித்து அதிகாரிகள் கூறுகையில், “இந்த பயணத்தில் இசை, கலாச்சார நிகழ்ச்சிகள், உடற்பயிற்சி கூடம், ஸ்பா மற்றும் திறந்தவெளி கண்காணிப்பு தளம் போன்ற பல வசதிகள் இருக்கும். கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதியில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது ” என தெரிவித்தனர்.