மிச்சிகனில் மர்மமான முறையில் நாய்கள் இறந்த காரணம் வெளியானது
By: Nagaraj Sun, 28 Aug 2022 09:26:13 AM
மிச்சிகன்: அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் மர்மமான முறையில் டஜன் கணக்கான நாய்கள் மரணமடைந்தன. இதற்கான காரணம் குறித்து கண்டறியப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
மிச்சிகன் மாகாணத்தில் உள்ள நாய்கள் காப்பகம் ஒன்றில் திடீரென்று 30 நாய்களுக்கு மேல் ஒன்றின் பின் ஒன்றாக மரணமடைந்துள்ளது. ஆனால் இறப்புக்கான காரணம் என்ன என்பதை கால்நடை மருத்துவர்களால் முதலில் கண்டறிய முடியவில்லை.
இந்த நிலையில் மாகாண வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் அதன் காரணம் தொடர்பில் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பார்வோவைரஸ் என்ற மர்ம நோய் என மிச்சிகன் மாகாண பல்கலைக்கழக கால்நடை மருத்துவ ஆய்வகத்தில் பரிசோதனைக்கு பின்னர் உறுதி செய்துள்ளனர்.
பார்வோவைரஸ் என்பது ஒரு பொதுவான நோயாகும், இது முற்றிலும் தடுப்பூசி
போடப்படாத நாய்களைக் கொல்லும் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொதுவாக
மிச்சிகன் மாகாணத்தில் நாய்களை தொடர்ந்து பரிசோதனைக்கு உட்படுத்தி
வந்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு முறையும், நோய்த்தொற்று அறிகுறிகள்
காணப்படவில்லை என்றே கூறுகின்றனர்.
மேலும், தடுப்பூசி போடப்படாத
நாய்கள் மற்றும் நாய்க்குட்டிகளுக்கு தடுப்பூசி போடப்படும் வரை மற்ற
விலங்குகளிடம் இருந்து விலக்கி வைக்குமாறு கால்நடை மருத்துவர்கள்
பரிந்துரைத்துள்ளனர். மட்டுமின்றி, வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது
பசியின்மை போன்ற பார்வோவைரஸின் அறிகுறிகளை ஒரு செல்லப் பிராணி
வெளிப்படுத்தினால், உடனடியாக கால்நடை மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்
எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.