நரேந்திர மோடி உண்மையிலேயே சரண்டர் மோடி ஆகிவிட்டார் - ராகுல் காந்தி
By: Karunakaran Mon, 22 June 2020 12:59:24 PM
லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ஆம் தேதி இந்திய-சீன ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதல் காரணமாக எல்லை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த மோதல் குறித்து பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சீனாவின் அத்துமீறிய இந்த தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் சீன பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும். இந்த மோதலை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது. இந்த மோதல் குறித்து பல நாடுகள் தங்களது கவலையை தெரிவித்தனர். இந்த மோதல் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் டுவிட்டரில் கருத்து பதிவிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி இந்திய பகுதியை சீனாவிடம் ஒப்படைத்து விட்டார். அந்த நிலம் சீனாவுக்கு சொந்தமானது என்றால் அங்கு நமது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், சீனாவை தாஜா செய்யும் இந்தியாவின் கொள்கை அம்பலமாகி இருக்கிறது என்ற வெளிநாட்டு பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையின் தலைப்பை இணைத்து, நரேந்திர மோடி உண்மையிலேயே ‘சரண்டர் மோடி’ ஆகிவிட்டார் என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.