ரோவர் விண்கலத்தை நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்ய நாசா அனுப்புகிறது
By: Nagaraj Fri, 26 May 2023 8:25:46 PM
நியூயார்க்: நிலவின் மேற்பரப்பில் நீர் உள்ளதாக என்பதைக் கண்டறிய நாசா ரோவர் விண்கலத்தை அனுப்பி சோதனை செய்யத் திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
1972 க்குப் பிறகு முதன்முறையாக விண்வெளி வீரர்களை சந்திரனுக்குத் திருப்பி அனுப்ப நாசாவின் ஆர்ட்டெமிஸ் மிஷன் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது. நாசாவின் VIPER எனப்படும் ரோவர் விண்கலத்தை அடுத்த ஆண்டு நிலவின் தென்துருவத்தில் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ரோவர் மூலம் நிலவின் மேற்பரப்பில் பனி அல்லது நீர் இருப்பு குறித்து ஆராயப்படும் என நாசா குறிப்பிட்டுள்ளது.
430 கிலோ எடை கொண்ட ரோவர் சூரிய சக்தியில் இயங்கும் தன்மை கொண்டது. நான்கு சக்கரங்களுடன் எந்தத் திசையிலும் நகரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.