ஹாங்காங்கில் முக்கிய ஜனநாயக ஆர்வலர் நாதன் லா வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாக தகவல்
By: Karunakaran Sat, 04 July 2020 10:54:05 AM
ஹாங்காங் அரசின் அனுமதி இல்லாமல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை சீனா நேரடியாக மேற்கொள்ளும் தேசிய பாதுகாப்புச்சட்டத்தை சீனா ஹாங்காங்கில் அமல்படுத்தியது. இதனால் ஹாங்காங்கின் சுதந்திர சுயாட்சிக்கு முடிவு கட்டப்படும் என ஜனநாயக ஆர்வலர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் அங்கு 'சுதந்திரமான ஹாங்காங்’ என்ற வார்த்தையை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புச்சட்டம் அமல்படுத்தப்பட்ட பின், நூற்றுக்கணக்கானவர்கள் ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பின், நகரின் பாதுகாப்பு படை தலைவராக ஜங்ஜியாங் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டார். இவர் போராட்டக்காரர்களை கொடூரமாக ஒடுக்கும் முறையை பின்பற்றுபவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது ஹாங்காங்கின் மிகவும் பிரபலமான ஜனநாயக ஆர்வலர் நாதன் லா தான் நகரை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவித்துள்ளார். ஜனநாயக ஆதரவு டெமோசிஸ்டோ என்ற கட்சியை ஹாங்காங்கில் தொடங்கியவர் நாதன் லா ஆவார். தேசிய பாதுகாப்புச்சட்டத்தால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் ஹாங்காங்கை விட்டு வெளியேறி விட்டதாக நாதன் லா தெரிவித்துள்ளார்.
தற்போது எந்த நாட்டில் இருக்கிறேன் என்ற தகவலை அவர் கூறவில்லை. ஹாங்காங்கில் அமல்படுத்தப்பட்ட பாதுகாப்பு சட்டத்தால் ஆயிரக்கணக்கான ஜனநாயக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என உலகம் முழுவதும் உள்ள பல சமூக செயல்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்.