நீங்கள் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது; எஸ்பிபி மறைவு குறித்து நயன்தாரா
By: Monisha Sat, 26 Sept 2020 5:46:48 PM
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று மதியம் 1:04 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அறிக்கை ஒன்றின் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. தலைமுறைகளை தாண்டி நம்மை மகிழ்வித்த திரு எஸ்பி பாலசுப்ரமணியம் சாருடைய குரல், நம்முடைய எல்லா காலங்களுக்கும், காரணங்களும் பொருந்தி இருக்கும்.
நீங்கள் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது... ஆயினும் உங்கள் குரல் என்றென்றும் நீங்கா புகழுடன் இருக்கும். உங்களுக்கு அஞ்சலி செலுத்தி, எங்களுக்கு நாங்களே ஆறுதல் சொல்லிக் கொள்ளும் இந்த நேரத்தில் கூட உங்கள் பாடல் மட்டுமே பொருந்துகிறது. எங்கள் வாழ்வில் உங்களின் ஆளுமை அப்படி. நீண்ட காலமாக இடைவிடாமல் உழைத்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு மனம் இல்லாமல் பிரியா விடை கொடுக்கிறோம்.
பாடும் நிலா விண்ணிலிருந்து பாடட்டும். உங்களை பிரிந்து வாடும் உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், உங்கள் திரை உலக சகாக்களுக்கும், உலகெங்கும் பரவி இருக்கும் உங்கள் எண்ணற்ற ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த ஆறுதல் செய்தி இது... இவ்வாறு நடிகை நயன்தாரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.