இந்தியாவுடன் இணைந்து தடுப்பூசி தயாரிக்க பேச்சுவார்த்தை ; சீனா அறிவிப்பு
By: Nagaraj Thu, 19 Nov 2020 10:01:46 AM
விரைவில் பேச்சுவார்த்தை... 'கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பது உள்ளிட்டவற்றில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து விரைவில் பேச்சு நடத்தப்படும்' என சீனா கூறியுள்ளது.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய 'பிரிக்ஸ்' அமைப்பின் மாநாடு நேற்று முன்தினம் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நடந்தது. இதில் சீன அதிபர் ஷீ ஜிங்பிங் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய சீன அதிபர் ஷீ ஜிங்பிங் 'கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பது உள்ளிட்டவற்றில் இணைந்து செயலாற்றுவது குறித்து ரஷ்யா, பிரேசிலுடன் பேசி வருகிறோம்.
இந்தியா, தென்னாப்பிரிக்காவின் ஒத்துழைப்பையும் நாடுவோம்' என குறிப்பிட்டார். இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறியதாவது:
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பது அனைத்து நாடுகளுக்கும் அது
கிடைப்பது ஆகியவற்றில் இணைந்து செயலாற்ற 'கோவாக்ஸ்' என்ற அமைப்பு
உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலமாக தடுப்பூசியை தயாரிப்பது மற்ற
நாடுகளுக்கு உரிய அளவு கிடைப்பது உள்ளிட்டவற்றில் இணைந்து செயலாற்ற
உள்ளோம்.
தடுப்பூசி தயாரிப்பது தொடர்பாக சீன நிறுவனங்கள் பல
நாடுகளுடன் பேசி வருகின்றன. இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனும் விரைவில்
பேசவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.