அமெரிக்காவில் ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு
By: Karunakaran Sat, 18 July 2020 09:26:24 AM
சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 41 லட்சத்து 76 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 71 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோருக்கு புதிதாக கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,66,605 ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் 1 கோடியே 41 லட்சத்து 76 ஆயிரத்து 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடைய 51 லட்சத்து 36 ஆயிரத்து 963 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறனர். உலகம் முழுவதும் 84 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 5 லட்சத்து 98 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.