போர்ச்சுக்கல் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்
By: Karunakaran Sun, 01 Nov 2020 08:45:20 AM
கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தற்போது பல்வேறு ஐரோப்பிய நாடுகளை தாக்கியுள்ளது. பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட பல நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இங்கிலாந்தில் டிசம்பர் 2-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
தென் ஐரோப்பாவில் உள்ள போர்ச்சுக்கல் நாட்டிலும் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் அங்கு 4,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், போர்ச்சுக்கலில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் அண்டோனியோ கோஸ்டா கூறுகையில், தற்போது கொரோனா வைரசின் 2வது அலை வீசி வருகிறது. போர்ச்சுக்கலில் கொரோனா அதிகளவில் பரவுவதை தடுக்க புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. நவம்பர் 4-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரி மற்றும் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்காகவும் பொது மக்கள் வெளியில் வரக்கூடாது என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் 121 மாநகராட்சிகளில் ஊரடங்கு மிக தீவிரமாக அமல்படுத்தப்படும். நாட்டின் 70 சதவீத மக்கள் தற்போது பாதிப்பு அதிகமாகி இருக்கும் பகுதிகளில் இருப்பதால், ஊரடங்கு விதிகளை கடுமையாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.