ரயில் பெட்டிகளில் புதிய வசதி
By: vaithegi Tue, 12 July 2022 8:04:50 PM
தமிழகம் : பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவு என்பதாலும், நீண்ட தூர பயணத்திற்கு ஏதுவாக கழிப்பறை வசதி இருக்கிறது என்பதாலும் பலரும் ரயிலில் தான் பயணம் செய்ய விரும்புகின்றனர். கடந்த சில நாட்களாக ரயில் கட்டணம் அதிகரித்தபடியே இருக்கிறது மற்றும் பயணிகள் ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட்டு வருகின்றன. மேலும், மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகைகளையும் ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. இதனால், நீண்ட தூரம் ரயிலில் பயணிக்கும் பயணிகள் கூடுதல் கட்டணத்தால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதையடுத்து, ரயில்களின் பெயரை மாற்றம் செய்து பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு பிறகு அனைத்து தொலைத்தூர ரயில்களிலும் முன்பதிவு வசதி கொண்ட இரண்டு ஸ்லீப்பர் பெட்டிகள் மட்டுமே இணைக்கப்படும் எனவும் மீதமுள்ள பெட்டிகள் அனைத்தும் குளிர்சாதனப்பெட்டிகளாக மாற்ற இருப்பதாகவும் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
மேலும், ரயில்களின் வேகத்தை உயர்த்தவும் ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனையடுத்து, முதற்கட்டமாக இந்த திட்டத்தை தென்மாவட்டங்களுக்கு செல்லும் பாண்டியன், முத்துநகர், பொதிகை, மலைக்கோட்டை, சோழன் மற்றும் கோவை மேட்டுப்பாளையம் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் செயல்படுத்தவுள்ளனர்.
சாதாரண ஸ்லீப்பர் பெட்டிகளில் இடம் கிடைக்காத பயணிகள் குளிர்சாதனப்பெட்டிகளில் தான் பயணம் செய்ய வேண்டி இருக்கும். மேலும், சாதாரண ஸ்லீப்பரை விட குளிர்சாதனப்பெட்டிகளில் கட்டணம் அதிகம். ஆகவே, ஒன்றிய அரசின் இம்முடிவால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.