சீனாவில் பன்றிகளிடையே பரவும் புதிய வைரஸ்...மனிதர்களிடம் மிக எளிதாக பரவ வாய்ப்பு
By: Monisha Thu, 02 July 2020 11:59:45 AM
சீனாவில் பன்றிகளிடையே பரவிவரும் புதிய நோய்த்தொற்று குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் அது ஸ்வைன் ஃப்ளூ என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி இருக்கின்றனர். மேலும் இந்த வைரஸ் சீனாவில் கடந்த 2011 முதலே காணப்படுகிறது என்றம் அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது கொரோனா வைரஸ் போன்று மனிதர்களிடம் மிக எளிதாகப் பரவிவிடும் தன்மைக் கொண்டது. எனவே ஆரம்பத்திலேயே இதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என எச்சரிக்கை செய்துள்ளனர்.
சீனாவின் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 6 மாதத்தில் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் புதிய வைரஸ் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவும் மனிதர்களுக்கு எளிதாக நோய்த்தொற்றை ஏற்படுத்தி பெருந்தொற்றாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவல் குறித்து உலகச் சுகாதார நிறுவனம் சீனாவின் உகான் மாகாணத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. நோய்ப் பரவலின் ஆரம்பக் கட்டத்தை தெரிந்து கொண்டால் நோயைக் கட்டுப்படுத்துவது எளிதாக இருக்கும் என்ற நோக்கில் இந்த ஆய்வுகள் தற்போது முடுக்கிவிடப்பட்டு இருக்கின்றன.
ஆய்வில் இதுபோன்ற பல வைரஸ் பரவல்கள் அடுத்தடுத்து உலகத்தைத் தாக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்திருந்தனர். அதைத்தொடர்ந்து தற்போது பன்றிகளிடம் ஸ்வைன் ஃப்ளூ எனப்படும் புதிய வைரஸ் தொற்று அதிகமாக பரவிவருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் 50 கோடிக்கும் அதிகமான பன்றிகள் வளர்க்கப் படுகின்றன. தற்போது ஏற்பட்டு இருக்கும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக சீனாவின் 10 மாகாணங்களில் கடுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் சீனா முழுவதும் இந்த ஆய்வு விரைவுப் படுத்தப்பட வேண்டும் என்றும், ஆரம்பக் கட்டத்திலேயே இந்த நோயைக் கட்டுப்படுத்தாவிட்டால் மனித இனத்திற்கு மற்றொரு பெரிய ஆபத்தாக இது மாறிவிடும் எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.