- வீடு›
- செய்திகள்›
- புதிதாக சேரும் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை - டிரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு
புதிதாக சேரும் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை - டிரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு
By: Karunakaran Sun, 26 July 2020 7:07:36 PM
அமெரிக்கா வேலைவாய்ப்பு மட்டுமின்றி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கல்விகளை பயில சிறந்த இடமாக உள்ளது. இதனால் அமெரிக்கா வெளிநாட்டு மாணவர்களுக்காக எப்1, எம்1 போன்ற கல்வி விசாக்களை வழங்கி வருகிறது. சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்த மாணவர்களே அதிக அளவில் இந்த விசாக்களைப் பெற்றுள்ளனர்.
தென் கொரியா, சவுதி அரேபியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் அதிக அளவிலான மாணவர்கள் ஆண்டு தோறும் அமெரிக்கா சென்று பயின்று வருகின்றனர். தற்போது அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளதால், அங்கு கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் நடப்பு கல்வியாண்டிற்கான பாடங்களை ஆன்லைன் மூலம் எடுத்து வருவது டிரம்ப் நிர்வாகத்துக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அமெரிக்க குடியுரிமைத் துறை கடந்த மாதம் அறிவித்தது.
இந்நிலையில் அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு அந்நாட்டு குடியுரிமைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 9-ம் தேதிக்கு பின்னர் பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்படாமல் உள்ள மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் சேர விரும்பினால் அவர்களுக்கு விசா வழங்கப்பட மாட்டாது. அவர்கள் அமெரிக்காவில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.