கொலம்பியாவில் ஜார்ஜ் பிளாய்ட் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 9 பேர் உயிரிழப்பு
By: Karunakaran Fri, 11 Sept 2020 09:45:04 AM
அமெரிக்காவில் கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் போலீஸ் பிடியில் சிக்கியபோது, அவரின் கழுத்தில் போலீஸ் அதிகாரி தனது முழங்காலை வைத்து நெரித்ததில் அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் அங்கு மாபெரும் போராட்டம் வெடித்தது. அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதிகேட்டு போராட்டங்கள் நடைபெற்றன.
கொலம்பியாவிலும் ஜார்ஜ் பிளாய்ட் போன்ற மற்றுமொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலம்பியா நாட்டின் தலைநகர் பகோட்டாவின் எங்கடிவா என்ற பகுதியில் கடந்த 9-ம் தேதி இரவு நண்பர்களுடன் சென்றுகொண்டிருந்த 46 வயது நிரம்பிய ஜேவியர் ஆர்டோனிஸ் என்ற நபரை போலீசார் தடுத்து நிறுத்தி, அவரை சந்தேகநபராக கருதி கைது செய்ய முற்பட்டனர். இதனால் போலீசாருக்கும் ஜேவியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட போலீசாரை ஜேவியரை தரையில் தள்ளி அவரது கழுத்தில் முழங்காலால் அழுத்தினர்.
இதனால் ஜேவியருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அப்போது அவர் ‘தயவு நிறுத்துங்கள்’ என கூறினார். இந்த நிகழ்வை ஜேவியரின் நண்பர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். கைது நடவடிக்கையின் போது ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மருத்து ஜேவியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கொலம்பியா முழுவதும் போலீசாருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தின்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல்களும் ஏற்படுகின்றன. இந்நிலையில், ஜேவியரின் உயிரிழப்பிற்கு உரிய நீதி வழங்கவேண்டும் என கூறி நடைபெற்று வரும் போராட்டத்தில் வெடித்த வன்முறையில் இதுவரை 9 பேர் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்துள்ளனர். 9 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.