கொலம்பியா நாட்டில் ராணுவ விமான விபத்தில் சிக்கி 9 வீரர்கள் உயிரிழப்பு
By: Karunakaran Wed, 22 July 2020 07:46:14 AM
மத்திய அமெரிக்க கண்டத்தில் கொலம்பியா நாடு அமைந்துள்ளது. இங்கு அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் பல செயல்பட்டு வருகின்றன. இவர்களை ஒழிக்க அந்நாட்டு ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருவதால், சில சமயங்களில் கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்பு படையினர் மீது ஏவுகணைத்தாக்குதல் போன்ற பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள குவாய்வியார் மாகாணத்தில் நேற்று கிளர்ச்சியாளர்களை அழிக்கும் நடவடிக்கையாக ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
பிளாக்ஹாக் அதிநவீன ராணுவ ஹெலிகாப்டரில் 17 வீரர்கள் பயணம் மேற்கொண்டு தேடுதல் வேட்டை நடத்தினர். ஹெலிகாப்டர் இனிடிடா ஆற்றுப்பகுதியை கடந்த போது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது. அதன்பின், மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டபோது, இனிடிடா ஆற்றுப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை கண்டறிந்தனர்.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 9 வீரர்கள் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். மேலும், 2 பேர் மாயமாகினர். இதனால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்திற்கு கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை தாக்குதல் காரணமா? அல்லது தொழில்நுட்பக்கோளாறா? என கொலம்பிய ராணுவம் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டது.