- வீடு›
- செய்திகள்›
- வங்கி கடன் மோசடியில் கைதான நிரவ் மோடியின் காவல் நீட்டிப்பு - லண்டன் நீதிமன்றம் உத்தரவு
வங்கி கடன் மோசடியில் கைதான நிரவ் மோடியின் காவல் நீட்டிப்பு - லண்டன் நீதிமன்றம் உத்தரவு
By: Karunakaran Fri, 10 July 2020 09:01:50 AM
மும்பையை சேர்ந்த வைர வியாபாரியான நிரவ்மோடி, தனது உறவினர் மெகுல் சோக்சி என்பவருடன் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்றுள்ளார். ஆனால் வங்கி கடனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்.
அதன்பின், லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடியை கடந்த மார்ச் மாதம் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் கைது செய்தனர். தற்போது நிரவ் மோடி கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தற்போது, நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடுகடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதனால் அவர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
அடுத்தடுத்து அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியின் சிறை காவலை நீட்டித்துள்ளது. 28 நாள்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வரும் நிரவ் மோடி, வீடியோ கான்பரன்சில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது ஆகஸ்ட் 6-ம் தேதி வரை அவரது சிறை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.