பீகாரில் நிதிஷ் குமார் மீண்டும் ஆட்சியமைப்பார் - பிரதமர் மோடி
By: Karunakaran Sun, 01 Nov 2020 6:06:39 PM
பீகார் மாநிலத்தில் முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தற்போது 2ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பீகாரில் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று சாப்ரா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய பிரதமர் மோடி, முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு, நிதிஷ் குமார் மீண்டும் ஆட்சியமைப்பார் என்பது தெளிவாகியிருக்கிறது என்று கூறினார்.
மேலும் பிரதமர் மோடி பேசுகையில், உங்கள் வாக்குகளின் மூலம் பீகார் மாநிலம் பிணியால் பாதிக்கப்படாமல் காப்பாற்றுவீர்கள் என உறுதியாக நம்புகிறன். பீகாரில் இப்போது இரட்டை எஞ்சின் கொண்ட அரசாங்கம் உள்ளது. மறுபுறம் இரண்டு இளவரசர்கள் உள்ளனர், அவர்களில் ஒருவர் காட்டு தர்பாரில் இருந்து வந்தவர் என்று தெரிவித்தார்.
சாத் பூஜை வரை ஏழைகளுக்கு இலவச தானியங்கள் வழங்குவதை உறுதி செய்துள்ளோம். சாத் பூஜையை எப்படி கொண்டாடுவது என்று தாய்மார்கள் யாரும் கவலைப்படக்கூடாது. சமீபத்தில் கோபால்கஞ்சின் மகனான வேவெல் ராம்கலவன், சீசெல்சின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என மோடி உரையில் தெரிவித்தார்.
பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் உடனிருந்தார். கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். தற்போது அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ராகுல் காந்தியும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.