நிலம் கையகப்படுத்தும் பணிகளை தற்காலிகமாக நிறுத்திய என்எல்சி நிறுவனம்
By: Nagaraj Fri, 28 July 2023 09:47:15 AM
கடலூர்: என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பாமக சார்பில் இன்று பல இடங்களிலும் போராட்டங்கள் நடக்கிறது.
கடலூர். நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது இரண்டாவது பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக கத்தாழை, கரிவெட்டி, மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, கோ. ஆதனூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கும் விவசாய நிலங்களை கையகப்படுத்த பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து, விவசாயிகள் 2000 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்திய அனைத்து நிலங்களுக்கும் சமமான இழப்பீடு வழங்க வேண்டும்.
வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்று கூறி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
திடீரென என்எல்சி 30 ராட்சச மண் வெட்டும் இயந்திரத்தை வைத்து அறுவடைக்கு தயாராக இருந்த விவசாய விளைநிலத்தில் பயிர்களை அழித்து பரவனாறு வெட்டும் பணியை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையை எதிர்த்து பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டது.
இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நெய்வேலியில் முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது. எனவே, இன்று போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் கால்வாய் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.