தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க வாய்ப்பு இல்லை; அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
By: Monisha Tue, 25 Aug 2020 3:02:07 PM
தமிழகத்தில் தற்போதைக்கு தியேட்டர்களை திறக்கும் வாய்ப்பு இல்லை என்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ந் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த ஜூன் 1-ந் தேதியில் இருந்து மாதந்தோறும் ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, பெரும்பாலானவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 10-ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, வரும் 1-ந்தேதியில் இருந்து மத்திய அரசு மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி வழங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தியேட்டர்களையும் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இது தொடர்பாக தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:- "மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் தமிழகத்தில் தற்போதைக்கு தியேட்டர்களை திறக்கும் வாய்ப்பு இல்லை. கொரோனா வைரஸ் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர்தான் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும். குறைந்த ரசிகர்களுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டால் அது தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
ஓடிடி-யில் படத்தை வெளியிடுவது சினிமா துறைக்கு ஆரோக்கியமானது அல்ல. தியேட்டர்களை திறக்க சிறிது காலம் ஆவதால் ஓடிடி-யில் படத்தை வெளியிடுவதை விட பொறுத்திருந்துதான் ஆக வேண்டும்" என்றார்.