பெங்களூருவில் ஊரடங்கு நீட்டிப்பு இல்லை - எடியூரப்பா அறிவிப்பு
By: Karunakaran Sat, 18 July 2020 11:54:15 AM
கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், அங்கு ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
பெங்களூருவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கடந்த சில நாட்களாக பெங்களூருவில் கொரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து 8 மண்டலங்களின் பொறுப்பாளர்களுடன் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், பெங்களூருவில் ஊரடங்கை நீட்டிக்க முதல்-மந்திரி எடியூரப்பா விரும்பவில்லை எனவும், ஊரடங்கு காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது, அதற்கு பதில் கொரோனா பாதித்த பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் எனவும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூருவில் ஊரடங்கு நீட்டிக்கப்படாது. ஊரடங்கால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளதாக வருவாய்த்துறை மந்திரி அசோக் தெரிவித்துள்ளார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்பும் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டுசெல்வதால் பெங்களூருவில் ஊரடங்கை நீட்டிக்கும் எண்ணம் தற்போது அரசிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.