முக கவசம் வேண்டாம்...தனிமனித இடைவெளி போதும் - சீனா அறிவிப்பு
By: Monisha Mon, 18 May 2020 10:48:01 AM
2019-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி சீனாவின் முக்கிய நகரமான வுகானில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 212 நாடுகளில் பரவிவிட்டது. இந்த நிலையில் சீன தலைநகரான பீஜிங்கில் இனி வீட்டை விட்டு வெளியே செல்வோர் முக கவசம் அணியத்தேவையில்லை என பீஜிங் நகர நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ள தகவல்: “பொதுமக்கள் இனி முக கவசம் அணிய தேவையில்லை. ஆனால் மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பைத்தவிர்க்க வேண்டும். அதாவது தனிமனித இடைவெளியை தொடரவேண்டும். இதனால் பொதுமக்கள் வெளிப்புற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். இது வாழ்க்கைத்தரத்தையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவியாக இருக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திபோடப்பட்ட சீன பாராளுமன்ற கூட்டம் 22-ந் தேதி திட்டமிட்டபடி தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிற வேளையில் இந்த முக கவச தவிர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போது சீனாவில் 17 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பாதித்து உள்ளது. அவர்களில் 12 பேருக்கு அறிகுறிகள் ஏதுமில்லை. மேலும் இந்த வைரஸ் தோன்றிய வுகான் நகரில் 1 கோடியே 10 லட்சம் மக்களுக்கும் கொரோனா வைரஸ் சோதனை நடத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி, சீனாவில் பாதிப்பு எண்ணிக்கை 82 ஆயிரத்து 947 ஆகவும், குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 78 ஆயிரத்து 227 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 4,634 ஆகவும் இருந்தது. தலைநகர் பீஜிங்கில் இந்த நோய் தோற்றில் இருந்து 570-க்கும் மேற்பட்டோர் மீண்டு வந்துள்ளனர்.