புதிதாக ஊரடங்கு அமல்படுத்த தேவை இல்லை - நிபுணர் குழு அறிக்கை
By: Karunakaran Mon, 19 Oct 2020 3:06:08 PM
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நிலை பற்றி ஆராய்வதற்காக மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத்துறை கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி புகழ்பெற்ற விஞ்ஞானிகளையும், கல்வியாளர்களையும் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது.
10 உறுப்பினர்களை கொண்ட இந்த குழு ஆராய்ந்து, ‘இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று நோயின் முன்னேற்றம், முன்கணிப்பு மற்றும் ஊரடங்கு பொதுமுடக்கத்தின் தாக்கங்கள்’ என்ற பெயரில் ஆய்வு நடத்தி ஒரு அறிக்கை தயாரித்துள்ளது. இந்த குழுவின் தலைவர் ஐதராபாத் ஐ.ஐ.டி.யின் பேராசிரியர் எம்.வித்யாசாகர் ஆவார்.
இந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ஊரடங்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தால் கடந்த ஜூன் மாதம் நாட்டில் கொரோனா உச்சம் தொட்டு 1 கோடியே 40 லட்சம் பேருக்கு மேல் தாக்கி இருக்கும். ஊரடங்கு பொதுமுடக்கம் மட்டும் போடாமல் இருந்திருந்தால், மிக குறைந்த காலத்திலேயே இறப்பு எண்ணிக்கை அதிகரித்து இருக்கும். அதிகபட்சம், கொரோனா பலி எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில், முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றுடன் ஊரடங்கு பொதுமுடக்கத்தையும் அமல்படுத்தி இருந்ததால், பிற நாடுகளை விட இந்தியா கொரோனாவை எதிர்த்து சிறப்பாக செயல்பட முடிந்தது. வரும் பண்டிகை காலத்திலும், குளிர்காலத்திலும் தொற்று பாதிப்பு வாய்ப்பு அதிகரிக்கலாம். ஆனால் சரியான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டால், அனைத்து நடவடிக்கைகளையும் மீண்டும் தொடங்கலாம். சுகாதார வசதிகளில் அபாயமான சூழல் உருவாகாத நிலையில், மாவட்ட அளவிலோ, மாநில அளவிலோ புதிதாக ஊரடங்கு பொது முடக்கம் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.