இ-பாஸ் இல்லாமல் குமரி மாவட்டத்திற்குள் வர அனுமதி இல்லை - கலெக்டர் பிரசாந்த் வடநேரே
By: Monisha Wed, 01 July 2020 5:20:03 PM
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வெளியிடங்களில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் இல்லாமல் குமரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல் மாவட்டத்திற்குள் வாகனங்களில் செல்ல இ-பாஸ் தேவையில்லை. குமரி மாவட்டத்தில் நோய்த்தொற்று அதிகம் பரவி வருவதை தொடர்ந்து அனைத்து கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓட்டல்களும், மருந்து கடைகளும் வழக்கம் போல் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தங்களது பகுதிக்கு வரும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
நேற்று முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்த 225 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.22 ஆயிரத்து 500 வசூலானது. நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இதுவரை மொத்தம் 44 ஆயிரத்து 866 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.