எந்த அறிவியல் ஆராய்ச்சியும் செய்யக்கூடாது... சீன கப்பலுக்கு இலங்கை அரசு நிபந்தனை
By: Nagaraj Sun, 14 Aug 2022 4:26:17 PM
இலங்கை: வரவேண்டாம் என்று தெரிவித்த பின்னரும் வருகை தந்த சீன கப்பலுக்கு இலங்கை அரசு நிபந்தனைகள் விதித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜதந்திர கவனத்தை ஈர்த்துள்ள சீனாவுக்கு சொந்தமான செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-5 கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைய இலங்கை அரசாங்கம் அனுமதித்துள்ளது. ஆகஸ்ட் 16 முதல் 22 வரை எரிபொருள் நிரப்புவதற்காக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும், பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின்படி, இலங்கை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள காலப்பகுதியில் கப்பல் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பல அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
இந்நாட்டு கடலில் எந்த அறிவியல் ஆராய்ச்சியும் செய்யக்கூடாது என
வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து நாடுகளுடனான இலங்கையின்
ஒத்துழைப்பு மற்றும் நட்புறவு கொள்கையை அமைச்சு மீண்டும்
வலியுறுத்தியுள்ளது.
அண்டைப்
பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கு அதிக முன்னுரிமை
வழங்கப்படுவதாகவும், சர்வதேச கடமைகளுக்கு இணங்க அனைத்து நாடுகளின் நியாயமான
நலன்களைப் பாதுகாப்பதே இலங்கையின் நோக்கமாகும் என்றும் அரசாங்கம் சீனக்
கப்பலுக்கு வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக நாடு கடுமையான பொருளாதார
நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இந்த தருணத்தில் இலங்கை மக்களின் நலனை
உறுதிப்படுத்தும் வகையில் பல செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அனைத்து
நாடுகளினதும் ஆதரவையும் ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் அமைச்சு
எதிர்பார்த்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.