எங்கள் ஊழியர்கள் யாரும் பணி நீக்கம் செய்யப்படமாட்டார்கள் - ஏர் இந்தியா விளக்கம்
By: Karunakaran Fri, 24 July 2020 10:31:37 AM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கினால் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பயணிகள் விமான சேவை மிகமிகக்குறைவான எண்ணிக்கையில் செயல்பட்டு வருகிறது.
பெரும்பாலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை அடைந்து வருகிறது. இதனால் செலவை குறைக்கும் நடவடிக்கைகளில் விமான நிறுவனங்கள் இறங்கியுள்ளது. அதன்படி, பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா காரணமாக மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனமும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதால், ஊழியர்களின் மாதாந்திர படிகளை குறைத்து உள்ளது. இந்நிலையில், ஏர் இந்தியா மண்டல தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ஊழியர்களின் செயல்திறன் போன்ற பல்வேறு காரணிகளை அறிக்கையாக தாக்கல் செய்ய கேட்டுக்கொண்டது.
இதனால் தனியார் நிறுவனங்களில் நடைபெற்ற பணி நீக்கம் போன்று ஏர் இந்தியாவிலும் ஊழியர்கள் பலர் பணி நீக்கம் செய்யப்படலாம் என அச்சம் ஏற்பட்டது. ஆனால் இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் விளக்கமளிக்கையில், பிற விமான நிறுவனங்களை போன்று ஏர் இந்தியா தனது ஊழியர்கள் யாரையும் பணி நீக்கம் செய்யாது என தெரிவித்துள்ளது.