வடமாநிலங்களில் கடும் பனிபொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
By: Nagaraj Sun, 08 Jan 2023 10:17:51 PM
புதுடெல்லி: நாடு முழுவதும் குளிர்காலம் நிலவி வரும் நிலையில் டெல்லி, உத்திரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சல் உள்ளிட்ட வட மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பனிப்பொழிவு காணப்பட்டு வருகிறது.
டெல்லியில் பல்வேறு இடங்களில் அதிகாலையில் பனிமூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர். சிக்னேச்சர் பாலம், முனிர்கா விஹார், ராஜ்காட் பகுதிகளில் கடும் பனிமூட்டத்தால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
புதுடெல்லி மற்றும் வட மாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் ஜனவரி 10-ம் தேதி முதல் குளிர் குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.