ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விளக்கம் அளித்த வடகொரியா
By: Nagaraj Fri, 14 July 2023 8:47:54 PM
நியூயார்க்: ஐ.நா.வில் விளக்கம் அளித்த வடகொரியா... ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அரிதாக பங்கேற்ற வடகொரியா, நாட்டின் தற்காப்புக்காகவே அண்மையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியதாக விளக்கம் அளித்தது.
உயர் வெடிபொருட்கள், ரசாயனம், அணு ஆயுதம் உள்ளிட்டவற்றை சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் Hwasong-18 என்ற பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நேற்று முன்தினம் வடகொரியா நடத்தியதற்கு தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய வடகொரியா தூதர், எதிரி படைகளின் ஆபத்தான ராணுவ நகர்வுகளைத் தடுக்கவும், தங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவுமே வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதாக கூறினார்.