வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் மூத்த ராணுவ அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை
By: Karunakaran Mon, 20 July 2020 10:55:10 AM
வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் பல ஆண்டுகளாக பகை நீடித்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து பேசிய பின், பகைமையை தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்டது. தற்போது இருநாடுகள் இடையே மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.
கடந்த சில மாதங்களாக வடகொரியாவில் இருந்து தப்பி தென்கொரியா சென்ற வட கொரிய எதிர்ப்பாளர்கள் சிலர், வட கொரிய அரசை விமர்சிப்பது போன்ற துண்டு பிரசுரங்களை ஹீலியம் பலூன்கள் மூலம் வட கொரியாவுக்கு அனுப்பி வந்தனர். இதனால் வடகொரியாவுக்கு கடும் கோபமடைந்து, கொரிய எல்லையில் இருந்த இருநாட்டு தகவல் தொடர்பு அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்தது.
தென் கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ஒத்திவைப்பதாக வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் கடந்த மாத இறுதியில் அறிவித்தும், கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. தற்போது, வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் தலைமையில் அந்நாட்டின் ராணுவ கூட்டம் பிரமாண்டமான முறையில் நடந்தது.
மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர் ரி பியோங் சோல் உள்பட உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். வடகொரியா ராணுவத்தின் திறனை மேம்படுத்துவது மற்றும் துருப்புகளை அணிதிரட்டுவதற்கான தயார் நிலை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இந்த கூட்டத்திற்கு பின், தலைவர் கிம் ஜாங் அன் பல முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.