அதிகாரிகளுக்கு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் எச்சரிக்கை
By: Nagaraj Thu, 27 Aug 2020 3:02:52 PM
அதிகாரிகளுக்கு எச்சரிக்கை... கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ‘பாவி’ சூறாவளி ஆகியவற்றால் ஏற்படக்கூடும் அபாயங்களை எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிம்மின் உடல்நலம் குறித்த வதந்திகள் மற்றும் அவர் தனது சகோதரியான கிம் யோ ஜோங்கிற்கு அதிகாரத்தை பகிர்ந்தளித்தார் போன்ற செய்திகள் வெளியான நிலையில், கட்சிக்கூட்டத்தில் கிம் ஜோங் உன் நேற்று (செவ்வாய்க்கிழமை) பங்கேற்றுள்ளார்.
பொலீட்புரோ கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றிய கிம், ‘வைரஸ் தொற்று
பரவாமல் இருக்க அதிகாரிகள் எடுத்த முயற்சியில் சில குறைபாடுகள்’ இருப்பதாக
தெரிவித்தார். இதுவரை வடகொரியாவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி
செய்யப்படவில்லை என்றாலும் வைரஸ் பரவல் ஏற்பட்டால் அது அங்கு பெரும்
தாக்கத்தை உண்டாக்கும் என்று கருதப்படுகிறது.
அத்துடன், இந்த வார இறுதியில் பாவி என்று பெயரிடப்பட்டுள்ள சூறாவளி வடகொரியாவை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடகொரியாவில் இதுவரை எந்த தொற்று பாதிப்பும் ஏற்படவில்லை என கூறி வந்தாலும் உலகநாடுகளுக்கு இது தொடர்பாக சந்தேகம் நீடித்து வருகிறது.