பாமகவின் மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை; எம்.பி. தயாநிதி மாறன் உறுதி
By: Nagaraj Thu, 24 Dec 2020 8:52:01 PM
ஒரு போதும் அஞ்சப்போவதில்லை... திமுக பனங்காட்டு நரி என்பதால் பாமகவின் மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்சப் போவதில்லை என்று தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்து உள்ளார்.
சென்னை பாரிமுனையில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாமக எப்போதும் வன்முறையை நம்பியிருக்கும் கட்சி. ஆனால் திமுக பனங்காட்டு நரி என்பதால் இந்த சலசலப்புக்கு அஞ்சாது என்று கூறினார்.
கூட்டணிக்காக பாமக பல கோடி ரூபாய் பேரம் பேசி வருவது அனைவரும் அறிந்த
ஒன்று. இதை வெளிப்படுத்தினால் தாக்க முயற்சி செய்கிறார்கள். கூட்டணிக்காக
பணம் வாங்கவில்லை என்றால் அதை மறுப்பதற்கு ராமதாஸும் அன்புமணியும் தயாராக
இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் அவர்கள் என்னோடு விவாதிக்க தயார்
என்றால் நானும் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன் என்றும் தயாநிதி மாறன்
தெரிவித்தார். தொடர்ந்து பேசிய தயாநிதி மாறன் முதலமைச்சர் எடப்பாடி
பழனிச்சாமிக்கு மதம் பிடித்து விட்டது. அதனால் வாய்க்கு வந்தபடி
பேசிக்கொண்டிருக்கிறார். வரும் தேர்தலில் மக்கள் அவர் தலையில் குட்டு
வைத்து அமர வைப்பார்கள் என்று தெரிவித்தார்.