தேசிய அரசாங்கத்தை அமைக்க தயாராக இல்லை; அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சொல்கிறார்
By: Nagaraj Tue, 21 July 2020 8:29:04 PM
தேசிய அரசாங்கத்தை அமைக்க தயாராக இல்லை... 2020 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்தனகல பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தீவிரவாத கருத்துக்களை ஆதரிக்கும் கட்சிகள் மற்றும் தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற கட்சி விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.
தேர்தலில் 150 ஆசனங்களை பெற்று முழுமையான அரசாங்கத்தை அமைப்பதை இலக்காக
கொண்டே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
பொதுஜன பெரமுன கட்சியின் கீழ் சிலர் தேர்தலில் போட்டியிட்டாலும் அவர்கள்
தற்போதைய அரசாங்கத்தின் நலனுக்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர்
பிரசன்ன ரணதுங்க குற்றம்சாட்டினார்.
அத்தோடு அரசாங்கத்துடன்
இணைந்திருக்கும் ஒரு பகுதியினர் ஒரு குறிப்பிட்ட வாக்காளர் எண்ணிக்கையைக்
கொண்டிருந்தாலும் முழு அரசாங்கத்தினையும் கட்டுப்படுத்த விரும்புகின்றனர்
என்றும் அவர் குறிப்பிட்டார்.