பிரச்சினையை அதிகரிக்க விரும்பவில்லை... கனடா பிரதமர் திட்டவட்டம்
By: Nagaraj Wed, 04 Oct 2023 9:38:35 PM
ஒட்டாவா: பிரச்சினையை அதிகரிக்க விரும்பவில்லை... இந்தியாவுடனான பிரச்சனையை அதிகரிக்க விரும்பவில்லை என்றும், ஆக்கபூர்வமான உறவை வலுப்படுத்த விரும்புவதாகவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஒட்டாவாவில் செய்தியாளர்களை சந்தித்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியாவுடனான கனடாவின் உறவு சவாலான காலகட்டத்தை கடந்து வருவதாக தெரிவித்தார். இந்தியாவுடனான பிரச்சனையை அதிகரிக்க விரும்பவில்லை என்றும், ஆக்கபூர்வமான உறவுகளை வளர்க்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவில் உள்ள 62 கனேடிய தூதரக அதிகாரிகளில் 41 பேரை வெளியேற்ற இந்தியா திட்டமிட்டுள்ளதாக லண்டனில் இருந்து வெளிவரும் பைனான்சியல் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டதை அடுத்து கனேடிய பிரதமர் ட்ரூடோவின் கருத்து வெளியாகியுள்ளது.
எனினும், 41 கனேடிய அதிகாரிகளை வெளியேற்ற இந்தியா திட்டமிட்டுள்ளது என்ற தகவலை அவர் உறுதிப்படுத்தவில்லை. காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய ஏஜென்சிகளுக்கு தொடர்பு இருப்பதாக ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இது கேலிக்கூத்தானது என்று இந்தியா பதிலளித்துள்ளது.