ரஷியாவில் கொரோனா தடுப்பூசி ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு வரலாம் என அறிவிப்பு
By: Karunakaran Mon, 17 Aug 2020 2:23:44 PM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ரஷியாவின் ராணுவ அமைச்சகமும், கமலேயா தொற்று நோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து ஸ்புட்னிக்-5 என்ற கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.
உலகின் முதலாவது தடுப்பூசியை தாங்கள் கண்டுபிடித்து, பதிவு செய்துவிட்டதாக ரஷிய அதிபர் புதின் கடந்த 11-ந் தேதி அறிவித்தார். இது உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த தடுப்பூசி குறித்து பல்வேறு நாடுகள் விமர்சனங்களை எழுப்பி வருகின்றன.
இந்த தடுப்பூசி குறித்து கமலேயா நிறுவனத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் கூறுகையில், தடுப்பூசியை திரளான மக்களுக்கு போடுவது சற்று தாமதமாகும். உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசியின் முக்கிய பகுதி, பதிவுக்கு பிந்தைய ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும். அதன்பிறகுதான் தடுப்பூசி விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், 2-3 வாரங்கள் அல்லது ஒரு மாதம் கூட ஆகலாம். எனவே ஒரு மாதத்தில் தடுப்பூசி திரளான மக்கள் பயன்பாட்டுக்கு வரலாம். அதே நேரத்தில், பதிவுக்கு பிந்தைய ஆய்வுகள் நடந்து முடிவதற்கு 6 மாதங்கள் வரைகூட ஆகலாம் என்று கூறியுள்ளார்.