Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்திரளான அளவில் கட்சியினர் கலந்துகொள்ள .. ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்திரளான அளவில் கட்சியினர் கலந்துகொள்ள .. ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

By: vaithegi Thu, 27 July 2023 12:57:24 PM

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்திரளான அளவில் கட்சியினர் கலந்துகொள்ள ..  ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

சென்னை: வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு ... ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவிற்குப் பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், புரட்சித் தலைவர் கண்ட மாபெரும் மக்கள் இயக்கத்தினை நான்கு முறை தமிழ்நாட்டில் ஆட்சிக்” கட்டிலில் அமர்த்தி, இந்திய தேசமே உற்றுநோக்கும் வகையில் எண்ணிலடங்கா திட்டங்களைத் தந்து, சமூக நீதிக்கு சாட்சி சொல்லும் இயக்கமாக வளர்த்து, இந்திய நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாம் பெரும் கட்சியாக உருவாக்கிய பெருமைக்குரியவர்.தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுப்பதிலும், ஒட்டுமொத்த தமிழினத்திற்கு நேசக்கரம் நீட்டுவதிலும், பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பதிலும், மாநில சுயாட்சிக்கு குரல் கொடுப்பதிலும் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நிகர் மாண்புமிகு அம்மா அவர்கள்தான்.

மேலும் "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்ற குறிக்கோளினை மனதில் நிலைநிறுத்தி, தமிழ்நாட்டு மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்த மாசற்ற மக்கள் தலைவி மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வசித்த இடமான கோடநாடு பங்களாவினை திருக்கோயிலாக கருதியவர்கள் ஒன்றரை கோடி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள். கோடநாடு பங்களா முதலமைச்சரின் முகாம் அலுவலகமாக விளங்கியது. மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு, மாண்புமிகு அம்மா அவர்கள் குடியிருந்த கோயிலான கோடநாடு பங்களாவில் கடந்த 24-04-2017 அன்று நுழைந்த ஓர் அரக்கர் கூட்டம் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி திரு. ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து, மற்றொரு காவலாளி திரு. கிருஷ்ணபகதூர் என்பவரை படுகாயப்படுத்தி, ஒரு கொள்ளை சம்பவத்தை அங்கே நிகழ்த்தியது.

இதன் தொடர்ச்சியாக மாண்புமிகு அம்மா அவர்களின் கார் ஓட்டுநராக இருந்த திரு. கனகராஜ், கோடநாடு பங்களாவில் கணினி பொறுப்பினை வகித்து வந்த திரு. தினேஷ், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட திரு. சயான் என்பவரது மனைவி மற்றும் மகள் உள்ளிட்டோர் மர்மமான முறையில் மரணமடைந்து உள்ளனர். இக்கொடூரங்கள் நிகழ்ந்து 6 ஆண்டுகள் கடந்தும், இந்தக் கொலைக்கும், கொள்ளைக்கும், மர்ம மரணங்களுக்கும் காரணமான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரிய திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு வந்த 90 நாட்களில் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை சட்டத்தின்முன் நிறுத்துவோம் எனக்கூறிய திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், இது தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து நடத்த உத்தரவிட்டு உள்ள நிலையில், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்து உள்ள நிலையில், இந்த வழக்கினை விரைந்து நடத்தாதது வியப்பை அளிக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் வழக்கு ஆமை வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

o. panneer selvam,protest ,  ஓ.பன்னீர் செல்வம்,கண்டன ஆர்ப்பாட்டம்


மாண்புமிகு அம்மா அவர்கள் வாழ்ந்த கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு விரைந்து நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே ஒன்றரை கோடி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.எனவே, கோடநாடு கொலை, கொள்ளை மற்றும் அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற மர்ம நிகழ்வுகள் குறித்த வழக்கினை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுத் தர உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஏற்கெனவே அறிவித்தபடி, வருகிற 01-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10-30 மணியளவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மற்றும் இலக்கிய அணி உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.மேலும் மேற்படி கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களின் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும்." என அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :