தான்சானியாவில் வரும் அக்டோபர் 28ம் தேதி ஜனாதிபதி தேர்தல்
By: Nagaraj Tue, 21 July 2020 8:29:26 PM
தேர்தல் தேதி அறிவிப்பு...தான்சானியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் அக்டோபர் 28ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆகஸ்ட் 26 முதல் அக்டோபர் 27ஆம் திகதி வரை தேர்தல் பிரசாரம் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஆளும் சமா சா மாபிந்துசி (Chama Cha Mapinduzi (CCM) Party) கட்சியின் வேட்பாளராக தற்போது ஜனாதிபதியாக உள்ள ஜோன் மகுபுலி (John Magufuli) போட்டியிடுகிறார். அத்துடன் பிரதான எதிர்க் கட்சியான சதேமா (Chadema) கட்சியின் தலைவர் ஃப்ரீமேன் மோபோ (Freeman Mbowe), துணைத் தலைவர் துண்டு லிசு (Tundu Lissu) உட்பட பல வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டியுள்ளனர்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளூர் ஆட்சியர்களையும்
தேர்ந்தெடுப்பதற்கு தான்சானியர்கள் ஒரே நாளில் வாக்களிக்கவுள்ளார்கள்.
இதேவேளை, அந்நாட்டில் வன்முறை மற்றும் அச்சுறுத்தல் நிறைந்த சூழலில்
தேர்தல்கள் நடைபெறும் நிலையில் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ள எதிர்க்கட்சி,
ஒரு சுயாதீன தேர்தல் ஆணையகத்தை அமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் சுதந்திரமானதும் நியாயமானதுமான வாக்கெடுப்பு நடைபெறும் என ஜனாதிபதி மகுபுலி உறுதியளித்துள்ளார்.