பூஸா சிறைச்சாலைக்கு சென்ற குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள்
By: Nagaraj Sat, 03 Oct 2020 09:17:34 AM
குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சிலர் நேற்று மாலை பூஸா சிறைச்சாலைக்கு விஜயம் செய்துள்ளனர். இது பல்வேறு ஐயப்பாடுகளை ஏற்படுத்தி உள்ளது.
குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகத் தலைவர்களில் ஒருவரான பொடி லெஸி என்பவர் அண்மையில் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் உட்பட பலரை படுகொலை செய்யப்போவதாக எச்சரித்திருப்பதாக தெரியவந்தது.
இந்த நிலையில், குறித்த நபருடன் சிறை வைக்கப்பட்டிருந்த ஏனைய கைதிகளிடம் இதுபற்றி விசாரணை செய்வதற்காகவே மேற்படி அதிகாரிகள் சென்றதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:
தங்களுக்கு சுதந்திரம் அளிக்காவிட்டால் சிறையிலிருந்து தப்பிச்
செல்லவுள்ளதாகவும், தங்களது குழுவினர் எந்த வேளையிலும் தற்கொலைத்
தாக்குதலுக்குத் தயாராக இருப்பதாகவும் பூஸா தடுப்பு முகாமில் தடுத்து
வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகத் தலைவர்களான பொடி லெஸி மற்றும் கொஸ்கொட
தாரக்க ஆகிய இரண்டு பாதாள உலகத் தலைவர்கள் அச்சுறுத்தல் வெளியிட்டிருப்பதாக
காலி மாஜிஸ்திரேட் நீதிமன்றில் நடந்த வழக்கு விசாரணையில் பிரதி
சொலிசிட்டர் ஜெனரல் திலீப்ப பீரிஸ் அண்மையில் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி,
பாதுகாப்புச் செயலாளர், சிறைச்சாலை ஆணையாளர் உள்ளிட்டவர்களின் உயிர்கள்
தங்கள் கைகளிலேயே இருப்பதாகவும், எந்த நேரத்திலும் தங்களால் அவர்களைக் கொலை
செய்ய முடியும் என்றும் குறித்த இருவரும் தெரிவித்திருக்கின்றனர். தாங்கள்
சிறையில் இருந்தாலும் இரண்டே மணித்தியாலங்களில் வெளியே உள்ளவர்களை
சுட்டுப் படுகொலை செய்ய முடியும் என்றும் அவர்கள் அச்சுறுத்தல்
விடுத்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளுக்காகவே குற்றப்
புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சிலர் நேற்று மாலை பூஸா சிறைச்சாலைக்கு
விஜயம் செய்துள்ளனர்.