பள்ளி உணவகத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து சீல் வைப்பு
By: Nagaraj Sat, 22 July 2023 6:46:10 PM
திருச்சி: பள்ளி உணவகத்தில் திடீர் ஆய்வு... திருச்சி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட ஏர்போர்ட் வயர்லெஸ் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவர் பள்ளி உணவகத்தில் உணவு வாங்கி சாப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி ரமேஷ் பாபு தலைமையில், அதிகாரிகள் பள்ளி உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் இல்லாததும், உணவு தயாரிக்கும் கூடம் அசுத்தமான முறையில் இருந்ததும் கண்டறியப்பட்டது.
இதை அடுத்து சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி உணவகத்தின் மீது உணவு பாதுகாப்புச் சட்டம் பிரிவு 56 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த உணவகம் தொடர்ந்து இயங்குவது மாணவர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால் உணவகத்தை பூட்டி சீல் வைத்தனர்.
இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி ரமேஷ் பாபு கூறுகையில், அனைத்து வகையான உணவகங்களும், விற்கப்படும் உணவுகள் தரமானதாகவும், சுத்தமானதாகவும் இருக்கிறது என்பதை உறுதிச் செய்ய வேண்டும். மேலும் உணவகங்கள் நடத்துவோர் உணவு பாதுகாப்புத் துறையிடம் இருந்து உரிய அனுமதி பெற்று உணவகங்களை நடத்த வேண்டும்.
தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு சட்டம் 2006 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும் இது தொடர்பாக பொதுமக்கள் 99 44 95 95 95 என்ற தொலைபேசி எண்ணில் புகாரை தெரிவிக்கலாம் என்று கூறினார்.