சூரிய கிரகணம் முடிந்ததும் மீண்டும் திருப்பதி கோவில் நடை திறக்கப்பட்டது
By: Karunakaran Mon, 22 June 2020 11:58:44 AM
நேற்று காலை 10.18 மணியில் இருந்து மதியம் 1.38 மணிவரை சூரிய கிரகணம் நடைபெற்றது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு ஏகாந்த சேவை முடிந்ததும் மூடப்பட்டது. சூரிய கிரகணம் முடிந்தவுடன் மீண்டும் நேற்று மதியம் 2.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
கோவில் நடை திறக்கப்பட்டபின், சுப்ரபாதம், சுத்தி, புண்ணியாவதனம், தோமாலா, அர்ச்சனை, கொலு, பஞ்சாங்க சிரவணம் போன்றவை நடைபெற்றன. மேலும் மாலை 2-வது முறையாக அர்ச்சனை, சாத்துமுறைநடைபெற்றது. இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை சுத்தி, கைங்கர்யம், நைவேத்தியம், இரவு 8 மணியில் இருந்து 8.30 மணிவரை ஏகாந்த சேவைகள் நடைபெற்றன. அதன்பின் கோவில் நடை சாத்தப்பட்டது.
சூரிய கிரகணம் காரணமாக நேற்று கோவிலில் இலவச தரிசனம், ரூ.300 டிக்கெட் ஆகியவற்றில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது. மேலும், ஆர்ஜித சேவையான கல்யாண உற்சவம் ரத்து செய்யப்பட்டது. சூரிய கிரகணத்தால் திருமலையில் உள்ள அன்னதானக்கூடம் திறக்கப்படவில்லை. இதனால் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படவில்லை.
நேற்று முன்தினம்10 ஆயிரத்து 93 பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்தனர். 2 ஆயிரத்து 35 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர. மேலும் பக்தர்கள் அளித்த உண்டியல் காணிக்கை ரூ.41 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.