பாகிஸ்தானில் உள்ள சந்தைப்பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழப்பு
By: Karunakaran Sat, 13 June 2020 1:13:01 PM
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனால் வல்லரசு நாடுகள் கூட கடும் பொருளாதார வீழ்ச்சியை அடைந்துள்ளன. இந்நிலையில் பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தானின் உயர்பாதுகாப்பு கொண்ட நகரமான ராவல்பிண்டியின் சத்தார் பகுதியில்உள்ள சந்தையில் மக்கள் அதிகமாக நடமாடுவர். நேற்று இரவு இந்த சந்தையில் திடீரென குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்தார். 15 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த குண்டுவெடிப்பு காரணமாக அந்த பகுதியில் உள்ள கட்டுமானங்கள் கடுமையாக சேதமடைந்தன. பின்னர் அங்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இது பயங்கரவாதத்தின் முயற்சி. பொதுமக்களின் உயிருடன் விளையாடுவோர் சட்டத்தில் இருந்து தப்ப முடியது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனாவுக்கு எதிராக பாகிஸ்தான் நாடு போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அங்கு பயங்கரவாதம் தலைதூக்கியிருப்பதனால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.