- வீடு›
- செய்திகள்›
- அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
By: Karunakaran Wed, 01 July 2020 3:33:28 PM
உலகின் முன்னணி இணைய வழி வணிக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் கிடங்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஜாக்சன்வில்லே நகரில் உள்ளது. இங்கு வேலைக்கு சேருவதற்காக விண்ணப்பிக்க ஏராளமான இளைஞர்கள் கிடங்குக்கு வெளியே வரிசையில் காத்திருந்தனர். அப்போது காரில் வந்த இறங்கிய 2 மர்ம நபர்கள் அங்கு நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
வரிசையில் நின்றிருந்த அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள சிதறி ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது. ஒரு சிலர் கிடங்குகள் ஓடிச் சென்று மறைந்து கொண்டனர். இருப்பினும். மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேரின் உடல்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. அதன்பின், அந்த மர்ம நபர்கள் காரில் தப்பி சென்று விட்டனர்.
இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
மற்ற 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. தப்பியோடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறோம் என்று கூறினர். மேலும், இது பயங்கரவாத தாக்குதல் இல்லை. தனிநபர்களை குறிவைத்து நடத்தப்பட்டது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.