Advertisement

இலங்கையில் ஒரு லட்சம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்

By: Nagaraj Fri, 11 Sept 2020 08:44:23 AM

இலங்கையில் ஒரு லட்சம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்

ஒரு லட்சம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்... இலங்கையில் 1980ஆம் ஆண்டுக்குப் பின்னரான கடந்த 40 வருடங்களில் சுமார் ஒரு இலட்சம் பேர் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Garnett Genuis தெரிவித்துள்ளார்.

இலங்கையில் காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி கனடாவில் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் நீண்ட நடைபவனிக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “வலிந்து காணாமலாகப்படுதல், கடத்தல் என்பன சர்வதேச உலகம் முழுவதிலும் பல நாடுகளிலும் சமூகங்களிலும் முக்கியமான ஒரு மனித உரிமைப் பிரச்சினையாக உள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கை முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது. இது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குடும்பங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

இலங்கையிலிருந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தினர் இந்த விடயம் தொடர்பாக குறிப்பாகவும் மனித உரிமை விவகாரம் குறித்து பொதுவாகவும் என்னைப் போன்ற அரசியல்வாதிகள் பேச வேண்டும். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றார்கள்.

walking,sri lanka,missing persons,people ,நடைபவனி, இலங்கை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள், மக்கள்

இப்போது ஒரு தொகையான மக்கள் இந்த விடயம் தொடர்பாக வழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு கனேடிய அரசாங்கத்தைக் கேட்பதற்காக ரொறன்ரோவிலிருந்து ஒட்டாவாவுக்கும் கியூபெக்கிலிருந்து ஒட்டாவாவுக்கும் நடைபயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த நடைபவனியை மேற்கொண்டுள்ள மக்களுக்கு எமது கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இலங்கையிலும் உலக நாடுகளிலும் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எமது கன்சர்வேட்டிவ் கட்சி கோரி வந்திருக்கின்றது.

இந்த நடைபவனியை மேற்கொண்டுள்ள மக்களுக்கு நான் வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். நீங்கள் கொடுக்கப்போகும் மகஜருக்கு கனேடிய அரசாங்கத்திடமிருந்து பதில் கிடைக்கும் என நம்புகின்றேன்” என தெரிவித்துள்ளார்.

Tags :