ரேசன் கார்டு அட்டைதாரர்களுக்கு வெங்காயம் ரூ.32க்கு விற்பனை
By: Nagaraj Sat, 31 Oct 2020 7:10:45 PM
ரேசன் கார்டு அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.32க்கு விற்பனை செய்ய கோவா அரசு முடிவு செய்துள்ளது. வெங்காய விலை உயர்வு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் முதல் அக்டோபா் வரையிலான காரீஃப் பருவத்தின் இறுதியில் பெய்த பலத்த மழையால், வெங்காயம் சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் நடப்பாண்டு வெங்காய விளைச்சல் குறைந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களில் வெங்காயத்தின் விலை அதிகரித்தது.
மேலும் கடந்த 10 நாட்களாக வெங்காய விலை உயர்ந்ததால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். அதனைத் தொடர்ந்து வெங்காயங்களை இருப்பு வைத்துக் கொள்வது, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உள்ளிட்டவற்றில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் மகாராஷ்டிரத்தின் நாசிக் மாவட்டத்தில் இருந்து 1045 மெட்ரிக்
டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய கோவா அரசு திட்டமிட்டுள்ளது. இதனை
கோவாவில் உள்ள ரேசன் அட்டைதாரர்களுக்கு வெங்காயம் கிலோ ரூ.32 விலையில் 3
கிலோ வரை விநியோகம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வெங்காய விலை உயர்வில் இருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்படுவர் என கோவா அரசு குறிப்பிட்டுள்ளது.