ஆழியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
By: Monisha Mon, 08 June 2020 10:51:03 AM
முதல் போக குறுவைசாகுபடிக்காக பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் தேவை நிலவியதையடுத்து, கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணையிலிருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
தண்ணீர் திறப்புக்காக நடைபெற்ற நிகழ்வில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன், மக்களவை முன்னாள் உறுப்பினர் சி.மகேந்திரன், வால்பாறை எம்எல்ஏ கஸ்தூரி வாசு, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, பிஏபி திட்ட கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு காரப்பட்டி, அரியாபுரம், பள்ளிவிளங்கால், வடக்கலூர், பெரியணை ஆகிய 5 வாய்க்கால்கள் வழியாக 6400 ஏக்கர் நிலங்களுக்கு, முதல் போக குறுவைசாகுபடிக்கு மொத்தம் 146 நாட்களுக்கு, 1156 மி.க. அடிக்கு மிகாமல், அக்டோபர் 31-ம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படும். நேற்று விநாடிக்கு 330 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்.
தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக மாநிலத்தின் ஒருசில பகுதிகளில் பெய்யத் தொடங்கியுள்ளது. வரும் வாரங்களில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.