தமிழகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கல்லூரிகள் திறப்பு
By: Monisha Mon, 07 Dec 2020 12:48:37 PM
கடந்த வருடம் நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக உலக அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது வைரஸின் தாக்கம் குறைந்த நிலையில் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் பாடம் கற்று வந்தனர்.
இந்நிலையில் இரண்டாம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு மற்றும் இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கு 7-ந் தேதி(இன்று) முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி தமிழகம் முழுவதும் கலை மற்றும் அறிவியல், என்ஜினீயரிங், வேளாண்மை, கால்நடை மருத்துவ கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவித்த நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கல்லூரி வகுப்புகள் தொடங்கியுள்ளன.