நவம்பர் மாதம் நடை திறப்பு... கட்டுப்பாடுகளை நீக்க ஆலோசனை கூட்டம்
By: Nagaraj Thu, 15 Sept 2022 10:47:24 PM
திருவனந்தபுரம்: நவ.17ம் தேதி நடை திறப்பு... சபரிமலையில் இந்த வருட மண்டல கால பூஜைகளுக்காக நவம்பர் மாதம் 17ம் தேதி நடை திறக்கப்படுகிறது. அப்போது கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது என்று தெரிய வந்துள்ளது.
பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் 27ம் தேதி நடைபெறுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல காலத்தில் தான் தொடர்ந்து 41 நாட்கள் நடை திறந்திருக்கும். மகர விளக்கு காலத்தில் தொடர்ந்து 20 நாட்கள் நடை திறந்திருக்கும். பிரசித்தி பெற்ற இந்த 2 பூஜை காலங்களில் தான் சபரிமலையில் பக்தர்கள் குவிவது வழக்கம்.
அப்போது சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும். பல மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்வார்கள். கடந்த பல வருடங்களுக்கு முன்பு சபரிமலையில் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு வசதி தொடங்கப்பட்டது. இருந்த போதிலும் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் தான் மிக அதிகமாகும்.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு
சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தரிசனத்திற்கு ஆன்லைன்
முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி, முக கவசம் உள்பட
பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதனால் கடந்த 2 வருடங்களாக மண்டல,
மகரவிளக்கு சீசன் சமயங்களிலும், மாத பூஜைகளின் போதும் சபரிமலையில்
பக்தர்கள் வருகை மிகவும் குறைந்தது.
இதனால்
கோயில் வருமானமும் குறைந்தது. இந்த நிலையில் இந்த வருட மண்டல கால
பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நவம்பர் 17ம் தேதி திறக்கப்படுகிறது.
இதனால் பக்தர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
திருவனந்தபுரத்தில் தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில்
நடந்தது. கூட்டத்தில், கடந்த 2 வருடங்களாக சபரிமலையில் அமல்படுத்தப்பட்டு
வந்த கொரோனா கட்டுப்பாடுகளை இந்த வருடம் நீக்குவது என்று முடிவு
செய்யப்பட்டது.
தரிசனத்திற்கான ஆன்லைன்
முன்பதிவை ஊக்குவிக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தரிசனத்திற்கு
தினசரி எண்ணிக்கை கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது. எத்தனை பேர்
வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும்
பக்தர்களுக்காக நிலக்கல் உட்பட 12 இடங்களில் உடனடி முன்பதிவு வசதியும்
ஏற்படுத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.