- வீடு›
- செய்திகள்›
- பீகார் தேர்தல் களத்தில் எதிரும் புதிருமான தலைவர்கள் ஒரே இடத்தில் இணைந்து அமர்ந்திருந்தனர்
பீகார் தேர்தல் களத்தில் எதிரும் புதிருமான தலைவர்கள் ஒரே இடத்தில் இணைந்து அமர்ந்திருந்தனர்
By: Karunakaran Wed, 21 Oct 2020 2:53:47 PM
பீகார் மாநிலத்தில் நெருங்கி வரும் சட்டமன்றத் தேர்தலை முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா இணைந்த கூட்டணி ஒரு அணியாகவும், எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் இணைந்த கூட்டணி மற்றொரு அணியாகவும் சந்திக்கின்றன. இதேபோல் ஆளும் என்டிஏ கூட்டணியில் இருந்து பிரிந்த லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிடுகிறது.
முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 28ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் முதல்வர் வேட்பாளரும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ், லோக் ஜனசக்தி தலைவர் சிரக் பஸ்வான் ஆகியோர் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கடும் சவாலாக உள்ளனர். ராம்விலாஸ் பஸ்வான் சமீபத்தில் மறைந்தபோது, முதல்வர் இரங்கல்கூட தெரிவிக்கவில்லை என்று அவரது மகன் சிரக் பஸ்வான் குற்றம்சாட்டினார்.
விமான நிலையத்தில் தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் நிதிஷ் குமாரின் காலில் விழுந்து வணங்கியபோது, அவர் கண்டுகொள்ளவில்லை என்று சிரக் பஸ்வான் வேதனையுடன் கூறினார். சிரக் பஸ்வானுக்கு ஆதரவாக தேஜஸ்வி பேசினார். இந்நிலையில், ராம் விலாஸ் பஸ்வானின் நினைவேந்தல் நிகழ்ச்சி பாட்னாவில் நேற்று மாலை நடைபெற்றதில் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்றார். இதேபோல் தேஜஸ்வி யாதவும் பங்கேற்றார். ஒரே பெஞ்சில் தேஜஸ்வி யாதவ், சிரக் பஸ்வான் ஆகியோருடன் நிதிஷ் குமார் அமர்ந்திருந்தார்.
தேர்தல் களத்தில் எதிரும் புதிருமான தலைவர்களுடன் நிதிஷ் குமார் அமர்ந்திருந்ததை பலரும் புகைப்படம் எடுத்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மூன்று தலைவர்களும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தது அனைவருக்கும் வியப்பை ஏற்பத்தியது. இந்த முறை சிரக் பஸ்வான், நிதிஷ் குமார் காலில் விழுந்து ஆசி பெற்றதாக சிரக் பஸ்வானின் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரக் பஸ்வானிடம் முதல் முறையாக நிதிஷ் குமார் பேசினார்.