அரசாங்கத்தை கேள்வி கேட்கும் உரிமை எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது - ஜே.பி.நட்டா
By: Karunakaran Thu, 25 June 2020 4:32:33 PM
லடாக் பிரச்சினை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., மோடி அரசின் வெளியுறவு கொள்கை தோல்வி அடைந்து விட்டதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். நேற்று முன்தினம் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றபோது பேசிய ராகுல் காந்தி, லடாக் எல்லையில் நமது நிலத்தை சீனா ஆக்கிரமித்து உள்ளது. நமது ராணுவத்துக்கு பிரதமர் மோடி துரோகம் செய்துவிட்டார் என்று கூறினார்.
இதுகுறித்து பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் சாம் பத்ரா கூறுகையில், உண்மையில் ஒரு அங்குல நிலத்தை கூட இந்தியா இழக்கவில்லை என்று கூறினார். இந்நிலையில், பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா இதற்கு பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், லடாக் எல்லை பிரச்சினை தொடர்பாகப ல கட்சிகளின் தலைவர்களும் பயனுள்ள கருத்துகளை தெரிவித்ததோடு, மத்திய அரசின் நடவடிக்கைக்கும், ராணுவத்துக்கும் முழு ஆதரவு தெரிவித்ததாக அவர் கூறினார்.
மேலும் அவர், அரசாங்கத்தை கேள்வி கேட்கும் உரிமை எதிர்க்கட்சிகளுக்கு உள்ளதாகவும், ஆனால் வாரிசு அரசியல் நடத்தும் ஒரு குடும்பம் மட்டும் தவறான தகவல்களை தெரிவித்து ஒரு மாயையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், நிராகரிக்கப்பட்ட அந்த குடும்பம் ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளுக்கு சமமாக முடியாது எனவும் கூறினார்.
ஒரு குடும்பத்தின் நலனே இந்தியாவின் நலன் ஆகிவிடாது. அந்த ஒரு குடும்பத்தின் தவறான அணுகுமுறையால்தான் ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் நிலத்தை நாம் இழந்தோம். சியாச்சென் மலைப்பகுதி முழுவதும் நம்மிடம் இருந்து போய்விட்டது. இது அனைவரும் ஒற்றுமையாகவும், அரசுக்கு ஆதரவாகவும் இருக்க வேண்டிய காலகட்டம் ஆகும் என ஜே.பி.நட்டா பதிலளித்துள்ளார்.