ஓ.பி.எஸ் மேல்முறையீடு மனு .. ஏப்ரல் 03ம் தேதிக்கு ஒத்திவைப்பு
By: vaithegi Fri, 31 Mar 2023 2:06:25 PM
சென்னை: கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டு, பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இத்தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து இந்த வழக்கு நிலுவையிலிருந்த சுழலில், அதிமுக பொதுச்செயலாளார் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, மார்ச் 28-ம் தேதி அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனக்கூறி, அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனடியாக மேல்முறையீடு செய்தனர். இதை அடுத்து இதில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு மட்டும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் போன்றோரது அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் போன்றோரது மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணைக்கு வரவில்லை. இது பற்றி நீதிபதிகளிடம், முறையிட்டதை அடுத்து அனைத்து வழக்குளையும், இன்று விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை நேரடியாக இறுதி விசாரணைக்கு எடுத்து வாதங்களை கேட்டு உத்தரவு பிறப்பிக்க அனைத்து தரப்புக்கும் சம்மதமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், நேரடியாக இறுதி விசாரணைக்கு தயார் என ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி என 2 தரப்பும் பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து 2 தரப்பும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுங்கள் என உத்தரவிட்ட நீதிபதிகள், ஏப்ரல் 3-ம் தேதி விசாரித்து உத்தரவு பிறப்பிக்கிறோம் என உத்தரவிட்டனர்.