Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பழனிசாமிக்கு எதிராக கூட்டணி அமைக்கும் ஓ.பி.எஸ்., - சசிகலா?

பழனிசாமிக்கு எதிராக கூட்டணி அமைக்கும் ஓ.பி.எஸ்., - சசிகலா?

By: Nagaraj Sat, 06 Aug 2022 6:59:31 PM

பழனிசாமிக்கு எதிராக கூட்டணி அமைக்கும் ஓ.பி.எஸ்., - சசிகலா?

சென்னை: கூட்டணியாகின்றனர்... பழனிசாமிக்கு எதிராக, பன்னீர்செல்வமும், சசிகலாவும் இணைந்து செயல்பட முடிவு செய்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.அ.தி.மு.க.,வில் பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கட்சியில் இருந்து தான் நீக்கப்பட்டதாக, பழனிசாமி தரப்பு கூறினாலும், 'நான் தான் பொதுச் செயலர்' என்று இப்போதும் கூறி வருகிறார்.அதேபோல், பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கியதாக, பழனிசாமி அறிவித்திருக்கிறார்.அவரை இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக,பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார்.
பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவில், அவர் இடைக்கால பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்டார். அதை எதிர்த்து பன்னீர்செல்வம் நீதிமன்றம் சென்றுள்ளார்.இந்நிலையில், பழனிசாமிக்கு எதிராக, பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் தினகரன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

sasikala,panneerselvam,pakabalam,sammatham,palaniswami,shock ,சசிகலா, பன்னீர்செல்வம், பக்கபலம், சம்மதம், பழனிச்சாமி, அதிர்ச்சி

அதை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் பன்னீர்செல்வம் ஆதரவாளரான செல்வராஜ் அளித்த பேட்டியில், 'சசிகலா, அ.தி.மு.க., உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை. அவருக்கு பதவி வழங்குவது குறித்து, கட்சி தலைமை தான் முடிவு செய்யும்' என்றார்.அதேபோல், சில தினங்களுக்கு முன், தேனி மாவட்டம் சென்ற, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரனுக்கு, பன்னீர்செல்வம் ஆதரவாளரான, தேனி மாவட்ட செயலர் சையத்கான் வரவேற்பு அளித்தார்.

முக்குலத்தோர் சமுதாய அமைப்பை சேர்ந்தவர்களும், அரசியலில் மீண்டும் எழுச்சி பெற, சசிகலா, பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் இணைந்து செயல்பட வலியுறுத்தி வருகின்றனர்.தினகரன் தனிக்கட்சி நடத்தி வருவதால், சசிகலா மற்றும் பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட, தயக்கம் காட்டி வருகிறார்.

ஆனால், பன்னீர்செல்வத்துக்கு பக்கபலமாக செயல்பட, சசிகலா சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக, பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த, தென் மாவட்ட எம்.எல்.ஏ.,க்களில் சிலரை இழுக்கும் முயற்சியை துவக்கி உள்ளனர். இது, பழனிசாமி தரப்பினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அதேநேரம் சசிகலாவுடன் இணைந்து செயல்படுவதற்கு, பன்னீர்செல்வம் தரப்பில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags :